ஆத்தங்கரை ஓரம்

 

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்தூர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் பல கிராமத்திற்கு  அணைக்கட்டு வடிவில் ஆபத்து வருகிறது. பிறந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரியமனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் அந்த கிராம பழங்குடி மக்கள் அனைவரும் அரசை எதிர்த்து, எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.3,20,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த படுகிறது. அதுவும் அணைகட்டானது சித்தூருக்கு பத்து கிலோமீட்டருக்கு முன்னால் லக்ஷ்மன் நகரப் பகுதிகள் தான் அணைகள் கட்டுவதற்கு முற்றிலும் ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த குடியிருப்பு பகுதிகள் மாநிலத்தின் முக்கிய வர்த்தகர்கள், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் அவருடைய அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைய இருக்கும் பகுதிகள். அதனால் 10 கிலோ மீட்டருக்கு தள்ளி பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த அணை வருகின்றது.



சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.


அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் வெற்றி பெறவா முடியும்...?  சிந்தூர் கிராமமும்,அதனை சுற்றிய கிராமமும் கொஞ்ச கொஞ்சமாய் சூறையாடப்படுகிறது.சுயநலவாதிகளால், இயற்கை வளம் எந்தளவுக்கு சீரழிக்கப்படுகிறது என்பதை பக்கங்கள் ஒவ்வொன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. முதல் பக்கம் முதல் கடைசிப்பக்கம் முடியும் வரை நம்மை கிராமவாசிகளாகவே வாழ விட்டிருக்கிறார் ஆசிரியர்.


நாகரிகம் எதுவும் அணுகாத அமைதியான பழங்குடி மக்களுக்கு எதிரான சமுக அவலங்கள் ஆணியடித்தது போல, மனதில் இறங்குகிறது.  கதையின் சம்பவங்கள், இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உரக்கவே சொல் கின்றன.


நமது கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும் ஆலமரம் மாதிரிதான். இது ஒரேடியாக பூமியில்  சரிந்தால் என்னவாகும். 'சித்தூரில் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. அது வரைக்கும் இங்க இருக்கின்ற 50 கிராமங்களில் ஒரு கொலை, கற்பழிப்பு, திருட்டு நடக்காத கிராமமாக சித்தூர் கிராமம் இருந்தது. என்றும் நதிக்கரையில் அழிந்தது என்று'  இந்த கிராமத்தை பற்றி வரும் சந்ததியருக்கு சொன்னால் நம்பவா போறாங்க என்ற' ஏக்கமும், கோவிந்த் பாயின்னு முடிவும் மனதை ரணமாக்குகிறது. 


 அண்டை மாநிலத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை பழங்குடியினர் வாழ்வை தொடர்ச்சியாக அழிப்பதன் மூலம் தீர்க்க முடியுமா ? என்ற கேள்வி சிந்திக்க வைக்கும் ஒன்று.


பழங்குடி பாமரர்களின் ஓட்டுவங்கி பலவீனமானது என்ற கருத்தில்தான் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவது பற்றி அரசு சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறது என்கின்ற கருத்து உண்மை.


 இந்த கதையில் தோன்றும் சில விஷயங்கள், இந்த அணை கட்டுவதற்கான திட்டங்களை வகுத்த முதல்வர், இன்றைய எதிர்கட்சியாக உள்ளார்.  இப்போது தேர்தல் நேரம் என்பதால், அணையால் பாதிப்பு என்று பழங்குடியினருக்காக வந்து போராடிக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு எதிரான திட்டங்களை வகுப்பதும், இப்போது அதை வேறு அரசு செயல்படுத்த போகிறது என்றால் அதனை எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமாக திமுக அரசு செய்துகொண்டிருப்பதையும், தமிழகத்தின் தற்போதைய நிலைமையையும் வெட்டவெளிச்சமாக 2004ஆம் ஆண்டு ஆத்தங்கரை ஓரம் என்னும் கதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.மேடையில் குரலை உயர்த்தி நீதி,நேர்மை பேசுபவர்கள் நிஜத்தில் அவர்கள் வாழும் போலி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

அதுமட்டுமின்றி டெல்லியில் நடக்கும் பேரணி, ஏதாவது பிரச்சனை என்றால், 'பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குவதாக கூறுவது' என காலங்காலமாக நடந்து வரும் அரசியலை 15 வருடங்களுக்கு முன்பாகவே  பதிவு செய்திருப்பது ஆச்சரியங்களில் ஒன்று.ஆசிரியர் வெ.இறையன்பு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


புத்தக வாசிப்பு பிரியர்கள் தவிர்க்க முடியாத ஒரு புத்தகம் ஆத்தங்கரை ஓரம்.


கார்த்திக் கிருபாகரன்

Comments

Post a Comment