கடல் புறா- முதல் பாகம்

       கடல் புறா - முதல் பாகம் 

ஒரு நாவலை படிக்க இத்தனை நாட்கள் நான் எடுத்துக் கொண்டதில்லை. முதல் பாகத்தை முடிக்கவே அதிகப்படியான நாட்கள் கடந்து சென்றன.பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட
சாண்டில்யன்.  இவர் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
வீரராஜேந்திர சோழன் காலத்தில்  கலிங்க- சோழர்களின் எல்லை விவகார சமயத்தில் நடக்கும் கதை.
புகார் நகரத்திலிருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.

அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார்.கலிங்க படை தன்னை தூரத்தி கொண்டு வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். அவரை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவனிடம் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன், குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் இளைய. பல்லவனிடம் குணவர்மன் கூறுகிறார்.

குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது 'வெண் புறா' (தூது புறா) அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.

மறு நாள் சிறையில் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவன் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி  காஞ்சனாதேவியின் உதவியோடு இளையபல்லவனையும்,சேத்தனையும் காப்பாற்றுகிறார்.

தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனா தேவி தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து கடற் பயணமாக காஞ்சனாதேவி, குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனா தேவி பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.
இதன் பதிப்பு 65-வது மதிப்பை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு கடல் புறாவை நான் என் தாத்தா வீட்டில் ஒரு பழைய புத்தகமாக பார்த்தேன். அப்போது அதில் பதினெட்டாவது பதிப்பு என போட்டு இருந்தது. அவர் அந்த புத்தகத்தை வாங்கி வெகு வருடங்கள் ஆனதாக சொன்னார். இப்போது நான் எனது பெரியப்பா மூலம் வாங்கிய போது அது 65 பதிப்பாக அச்சாகி இருந்தது.இதற்குமேல் நாவல் பற்றிய விமர்சனம் வைக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை.
ஏனெனில் அனைத்து மக்களும் விரும்பி வாசிக்கும் நாவலாக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று.
ஒரு திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள், ஒரு நாவல் எழுத நினைப்பவர்கள் அவசியமாக இந்த நாவலை வாசிப்பதன் மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். காட்சி அமைப்புகளை,போர் அமைப்புகளை, உணர்ச்சிகளை, சிறு சில அசைவுகளை கூட எழுத்துக்கள் மூலம் விளக்கி சாண்டிலியன் அவர்கள் ஒரு தனி முத்திரை பதித்துள்ளார்.இதனை திரைபடமாக பார்த்தால் முதல் பாகம் ஒரு மணி நேரம் கொண்ட காட்சியமைப்பு தான்.வசனங்கள்,போர் விவரிக்கும் முறை, காதல் பக்கங்கள் என சரித்திர நாவல் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது.ஆங்கில படங்களை கொண்டாடும் தமிழ் சினிமா இந்த மாதிரியான கதைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வியப்பு.


கார்த்திக் கிருபாகரன்



Comments

Popular posts from this blog

ஆலமரம்